பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள மற்றுமொரு தகவல்!
நாட்டில் பயணக்கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை தமது தொலைபேசியின் மூலமாவது காண்பிப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் பொதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அத்தியாவசியத் தேவைகளில் ஈடுபடுவோருக்கு பணிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டமையை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அத்தியாவசிய சேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை காண்பிப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.