நாட்டில் அறிமுகவுள்ள மின்சாரத் தொடருந்து சேவைத் திட்டம்
கொழும்பு புறநகர் தொடருந்து திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார தொடருந்து சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29.04.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் தொடருந்து சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
எதிர்நோக்கக்கூடிய சவால்கள்
இத்திட்டத்தின் கீழ் களனிவெளி தொடருந்து பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகமை, கரையோர தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட நடைமுறையாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தற்போதுள்ள தொடருந்து சேவைக்கு இணையாக மின்சார தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதுடன், தற்போதுள்ள அகலப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக நியமப் பாதைகளாக (Standard Gauge) தொடருந்து தண்டவாளங்களை புனரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் நிதி, போக்குவரத்து அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |