மின் கட்டண அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!
மின்சாரக் கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகளில் விலகல்கள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த கட்டண மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்து திருத்தப்பட்ட கட்டண சமர்பிப்பை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சார சபைக்கு காலக்கெடு
மின் உற்பத்தியில் நீர் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைவு,பொதுப்பயன்பாடுகளின் தேவை அதிகரிப்பு போன்றவற்றின் மதிப்பீடுகளில் விலகல்கள் ஏற்பட்டிருப்பதாகவும்,

குறித்த விலகல்களை திருத்தி, திருத்தப்பட்ட கட்டண சமர்ப்பிப்பினை முன்வைக்குமாறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
குறித்த திருத்தப்பட்ட கட்டணச் சமர்ப்பிப்பினை எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் துல்லியமான தரவுகளுடன் சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு காலக்கெடு வழங்கியுள்ளது.