மகிந்தவின் தனிப்பட்ட மருத்துவரை காவு கொண்டது கொரோனா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஏலியந்த வைட் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நம்பிக்கை நிமித்தம் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாமல் இருந்த இவர் கொரோனாவால் மரணமடைந்தார்.
கொரோனாவை ஒழிப்பதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இணைந்து நீர் நிறைந்த பானைகளை ஆற்றில் போட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த எலியந்த வைட் மரணமடைந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த ஏலியந்த வைட் தன்னோடு நெருங்கிப் பழகிய சிறந்த வைத்தியர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏலியந்த வைட்டின் மறைவு கவலை அளிப்பதாகவும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் பங்கு கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.