கோட்டாபயவை திறமையானவர் என்றே நம்பினோம்! அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்! சீற்றத்தில் தேரர்
நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை மிகவும் திறமையான, முகாமைத்துவம் குறித்து நன்கு புரிந்துணர்வு உள்ள தலைவராக நாங்கள் எண்ணிணோம் என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முதன்மையாக இருந்து செயற்பட்டவர்களில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு இரவு பகலாக பாடுபட்டவர்கள் தற்போது அவரிடம் இல்லை. தற்போது அவரை சுற்றியுள்ளவர்கள் நாட்டின் உண்மையான நிலைமையை அவருக்கு எடுத்துக்கூறுவதில்லை. இந்த நிலைமையில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை மிகவும் திறமையான, முகாமைத்துவம் குறித்து நன்கு புரிந்துணர்வு உள்ள தலைவராக நாங்கள் எண்ணிணோம். அவரை சுற்றி உள்ளவர்கள், அவரை இந்த நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்றே எமக்கு தோன்றுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச கீழ் மட்டத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டவர் என்பதை பிரதமருக்கு கூற வேண்டும். அவரது விம்பத்திற்காகவே இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை கையில் எடுத்து அவற்றை தீர்க்க தலையிடுமாறு நாங்கள் தயவுடன் அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஒரு புறம் கமத்தொழிலாளர்களின் பிரச்சினை. மறுபுறம் பொது சொத்துக்களை விற்பனை செய்யும் பிரச்சினை. இன்னொரு புறம் எமது அப்பாவி உயிரினங்கள் கடலில் இறக்கும் பிரச்சினை. மற்றுமொரு புறம் வாழ்க்கை பிரச்சினை.
இவ்வாறு பல பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கி வருகிறது. பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நாங்கள் பல அர்ப்பணிப்புகளை நாட்டுக்காக செய்துள்ளோம். இதனால், பிரச்சினைகளை கையில் எடுத்து தலையீடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். நிலைமைகளை ஜனாதிபதிக்கு சரியாக எடுத்துக் கூறுவதில்லை என நான் நினைக்கின்றேன்.
அவரை ஆட்சிக்கு கொண்டு வர இரவு பகல் பாடுபட்டவர்கள் அவர் அருகில் இல்லை என்பது எமக்கு தெரிகிறது.
நாங்களும் அதனை புரிந்துக்கொண்டுள்ளோம். இப்படி சென்றால், நாடு எஞ்சுமா? மக்கள் கஷ்டப்படுவதால், நன்றாக கண்ணை திறந்து பார்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.