வீரவன்சவும் கம்மன்பிலும் வெற்று வீரர்களே! சீண்டிப்பார்க்கும் அமைச்சர்
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற தலைவர்களை தென்னம் மட்டையால் கூட வெட்டி சாய்க்க முடியும் என அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardhana) தெரிவித்துள்ளார்.
வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
விமல் வீரவன்ச ஏன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கின்றார்? அடுத்த தேர்தலில் எந்த அணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்காக அவர் இதனை செய்கின்றார்.
இவர்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவே மேடையை அமைத்து கொடுத்தது. அரசாங்கத்துடன் இருக்க முடியாது என்றால், விலகலாம். வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களை தென்னம் மட்டையால் வெட்டி சாய்க்க முடியும்.
பலவந்தமாக இவர்களை வைத்துக்கொண்டு பாலுட்டும் தேவை எமக்கில்லை. இவர்களை போன்ற வெற்று வீரர்கள் எங்குமில்லை. இவர்கள் மைக் டைசன்கள். அதுதான் உண்மை. இவர்கள் உடம்பில் இருந்துக்கொண்டு காதை கடிக்கும் வேலையை செய்தனர்.
உதய கம்மன்பிலவுக்கு துறை சார்ந்த அமைச்சர் என்ற வகையில் எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க தெரிந்திருக்க வேண்டும். மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்கும் போது அவருக்கு பொறுப்பில்லையாம்.
எரிசக்தி அமைச்சரே எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால், எரிசக்தி அமைச்சர் பதவி எதற்கு தேங்காய் துருவவா? என ரோகித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.