இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா; 4 அடுக்கு ஊரடங்கு
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நாட்டின் பெரும்பகுதி அடுக்கு 3 மற்றும் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 43 சதவிகித மக்கள் ஏற்கனவே தங்குமிடத்திலேயே கடுமையான ஊரடங்கு நிலையில் உள்ளனர். ஐரோப்பாவில் 23 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 71, 670 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் ஏற்பட்ட நாடுகளில் இங்கிலாந்து ஒன்றாகும். நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வரும் நிலையில், யாருக்கு சிகிச்சை என்ற மிகக் கடினமான முடிவை மருத்துவர்கள் முன்னெடுக்கும் சூழல் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. கொரோனா நோயாளிகளை தவிர்த்து, மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பலர் அவதிக்கு உள்ளாகும் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியதாவது, இங்கிலாந்தில் 53,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
வடக்கு யார்க்சயர் மற்றும் லிவர்பூலில் 3 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் இன்றிரவு நள்ளிரவு முதல் இங்கிலாந்தின் பெரும்பகுதி 4 அடுக்கு ஊர்டங்கு கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டு வரப்படும். அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசி திங்கள்கிழமை முதல் கிடைப்பதால் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 அடுக்கு ஊரடங்கு வழிகாட்டுதல்களில் வீட்டில் தங்குவது , மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளை முடக்குவது ஆகியவை அடங்கும். 4 அடுக்கு ஊரடங்கு நடவடிக்கைகள் இப்போது இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியான மிட்லாண்ட்ஸ், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படும்.
லெய்செஸ்டர் சிட்டி, லீசெஸ்டர்ஷைர், லிங்கன்ஷைர், நார்தாம்ப்டன்ஷைர், நாட்டிங்ஹாம் மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர், டெர்பி மற்றும் டெர்பிஷைர், பர்மிங்காம் மற்றும் பிளாக் கன்ட்ரி, கோவென்ட்ரி மற்றும் சோலிஹல் உள்ளிட்ட 4 அடுக்கு ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வார்விக்சயர், லங்காஷயர், கும்ப்ரியா, க்ளூசெஸ்டர்ஷைர், போர்ன்மவுத், ஐல் ஆஃப் வைட் மற்றும் டீஸ் பள்ளத்தாக்கு ஆகியவற்றிலும் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதாகவும் அவர் கூறினார்.