ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை கைவிடாது - அமைச்சர் நம்பிக்கை
இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் (Jenny Correia Nunes) தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். .
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதாகவும், இலங்கை அதை நோக்கி செல்வது ஒரு நல்ல விடயமாகக் கருதுவதாகவும், இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்ய உதவ தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் போது பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தயாராகும் இச்சந்தர்ப்பத்தில் சேதனப் பசளை பயன்படுத்துவது குறித்து அச்சத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டினார்.
இயற்கை விவசாயம் அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளதென்றும், சில குழுக்கள் உரிய கேள்விமனுக் கொள்கைக்கு மாற்றமாக பசளை மாதிரிகளை இறக்குமதி செய்திருந்தன.
இது தொடர்பில் தாவர ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தி விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.