பயங்கரவாத தடைச்சட்டத்தை பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்தும் அரசாங்கம்- ஐரோப்பிய குழுவிடம் சுட்டிக்காட்டிய ஹக்கீம்!
சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை, அரசியல் ரீதியாக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துகின்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களின் தன்னிச்சையான தடுத்து வைப்புகள், அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்துகின்றது என்பது இதன் ஊடாக புலனாவதாக அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழு நேற்றைய தினம் இலங்கையை சென்றடைந்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் குறித்த குழு, அரச உயர்மட்டம், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கமைய அண்மைக்காலமாக இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் குறித்து இராஜதந்திரிகள் குழு இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் சந்தித்து கலந்துரையாடியது.