சிறிலங்கா அதிபர் ரணிலிடம் மூன்று முக்கிய செயல்முறைகளை வலியுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் நேற்று(10) அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடிருந்தனர். இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என்றும் அதிபர் ரணிலிடம் உறுதியளித்துள்ளனர்.
எனினும், குடியியல், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைக்கால மனித உரிமை மீறல்கள்
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை, சர்வதேச நாணய நிதியம், மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகிய 3 முக்கிய செயல்முறைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.