இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (29) மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடூழிய சிறைத்தண்டனை
அதன்படி, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புகளிற்கு மேலதிகமாக குறித்த இருவருக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு 53 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
