முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி கைது : சிக்கிய ஆயுதங்கள் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் இன்று (16) அவரது வீடு சோதனையிடப்பட்டது.
இதன்போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள், 7.2 ரகத் தோட்டாக்கள் 31, 0.2 ரகத் தோட்டாக்கள் 103 மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றிய அடிப்படையில், சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் முன்னெடுத்த மேலதிக சோதனைகளின் போது, அங்கு பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
அவற்றில் ஒரு துப்பாக்கி சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், மற்றைய 3 துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவையில் 2 சொட்கன் (Shotgun) ரக துப்பாக்கிகளும், 29mm ரக துப்பாக்கிகளும் அடங்குகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தன கத்ரியாராச்சி வசம் இவ்வளவு பெரிய தொகையிலான ஆயுதங்கள் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி (Chandana Kathriarachchi) ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலாவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது ரீ - 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த ஆயுதங்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தன கத்ரியாராச்சி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.