யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி - ஏமாற்றத்துடன் திரும்பிய படைத்தரப்பு (படங்கள்)
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுப் பணி
இன்று திங்கட்கிழமை(09) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவி காவல்துறை அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.
இதன்போது காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
4 இடங்களில் அகழ்வு
நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.