யாழ். செம்மணியில் மற்றுமோர் மனிதப் புதைகுழி - அதிர வைக்கும் ஆய்வறிக்கை
புதிய இணைப்பு
யாழ். (Jaffna) அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் தற்போது தோண்டப்படும் மனிதப் புதைகுழி இடத்துக்கு மேலதிகமாக மற்றுமோர் மனிதப் புதைகுழி இருப்பதாக அஞ்சப்படுகின்றது.
தற்போதைய பூர்வாங்க ஆய்வுகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. எனவே, அந்தப் பகுதியை முழுமையாக மனிதப் புதைகுழி காணப்படும் பிரதேசமாகப் பிரகடனப்படுத்துமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இதனால் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பல நூறு பேர் ஒரே காலகட்டத்தில் தொகுதி, தொகுதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை
இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உதவி நாடப்பட்டுள்ளது.
இதற்கமைய நிலத்தின் கீழ் ஸ்கான் செய்யப்பட்டு அவற்றின் மாதிரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
மூன்றாம் இணைப்பு
யாழ் - செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேச கண்காணிப்புடன் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதுடன் நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அகழடவாய்வுப் பணியை இடைநிறுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ். (Jaffna) - செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி "செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது.
கவனயீர்ப்பு போராட்டம்
இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
இதேவேளை, யாழ். (Jaffna) செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். நகர நுழைவாயில் - நாவற்குழி பகுதியில் இன்று (05.06.2025) வியாழன் காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
