வவுணதீவில் வயல் நிலத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அழிப்பு
மட்டு. வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள கற்பக்கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை இன்று (14.10.2025) விசேட அதிரடிப்படையின் வெடிக்க வைத்து அழித்துள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த வயலில் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திர மூலம் நிலத்தை பண்படுத்தும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களை கண்டு காவல்துறையினருக்கு அறியப்படுத்தினர்.
வெடிபொருட்கள் மீட்பு
இதனையடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவு வரவழைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் , ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிப்பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பிரதேசம் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
