கணக்காய்வு அறிக்கைகள் குற்றம் சாட்டும் ரணிலின் 3,500 கோடி மோசடி...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தி மூன்று நாட்களில் தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.166 மில்லியன் செலவிட்டதாகும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனைக்கு உரியவராக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதைவிடவும் பெரும் அளவிலான, அரசிற்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்திய இரண்டு ஊழல் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் தற்போது தென்னிலங்கை தரப்புகளில் சற்று பேசுபொருளாகியுள்ளன.“
இந்த இரண்டு பரிவர்த்தனைகளில், ஒன்றின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1,138 மில்லியன் (சுமார் ரூ.114 கோடி) ஆகும். மற்றொரு பரிவர்த்தனையால் ஏற்பட்ட இழப்பு ரூ.3,518 மில்லியன் (சுமார் ரூ.352 கோடி) என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விரு பெரும் இழப்புகளுக்கான சாட்சிகளை தேடி இங்கிலாந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரசின் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட இரண்டு கணக்காய்வு அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே போதுமானது என்றும் குறிப்பிடப்படுகிறது.
ரூ.3,518 மில்லியன் பரிவர்த்தனை என்ன..
இந்த பரிவர்த்தனை 2018 ஆம் ஆண்டு, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரி அவரின் கட்டுப்பாட்டில் இருந்தன. 2018 ஆம் ஆண்டு, மாலைதீவுகளைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) மூலம் 9 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடன் வழங்கும்போது, முறையான கடன் மதிப்பீடு அல்லது கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால் ஏற்படும் அபாய மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்பார்த்தபடியே, அந்த மாலைதீவு நிறுவனம் இந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. வங்கியால் 2022 வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டு, அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கை
2024 டிசம்பர் 31 வரை கூட ஒரு சதம் கூட செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின் படி, வட்டி உட்பட இந்த கடனின் மதிப்பு ரூ.1,138 மில்லியன் (ரூ.114 கோடி) ஆக உயர்ந்துள்ளது.
இந்த கடன் தற்போது “மோசமான கடன்” (Bad Loan) என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அப்படியாக வகைப்படுத்தும் போது கூட சுயாதீனமான தொழில்நுட்ப மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்திலும் நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியாக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனத்திற்கு, வெளிநாட்டு நாணயத்தில், எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்க ஒரு சாதாரண வர்த்தக வங்கிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அனுமதி அவசியம்.
அப்படியானால், எந்த அடமானமும் இல்லாமல், கடன் வசூலிக்கும் வழிமுறைகளும் இல்லாமல், அமெரிக்க டொலர் 9 மில்லியன் கடன் வழங்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுகிறது.
2018 ஆம் ஆண்டு, ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பெயரளவில் இல்லாவிட்டாலும், மத்திய வங்கி மற்றும் திறைசேரி அவரது கட்டுப்பாட்டில் இருந்தன.
சர்ச்சைக்குரிய பத்திர (Bond) மோசடியின்போதும் இவ்விரு நிறுவனங்களும் அவரின் கீழ் இருந்தன.
அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனும் அவரது நெருங்கிய கூட்டாளி என குறிப்பிடப்படுகிறது.
ரூ.1,138 மில்லியன் பரிவர்த்தனை
2022 ஜூலை 9 அன்று, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு நாட்டை விட்டு வெளியேறிய நேரத்தில், நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவியது.

அதனைத் தவிர்க்க இலங்கையின் முன்னணி கேஸ் நிறுவனம் ஒன்றுக்கு சர்வதேச எரிவாயு வழங்குநர்களிடமிருந்து விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
அதில் குறைந்த விலை முன்மொழிவு தாய்லாந்தின் கேஸ் நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்டது. அவர்கள், 300,000 தொன் LP கேஸை ஒரு தொன் அமெரிக்க டொலர் 96 என்ற விலையில் வழங்க முன்வந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச உட்பட அப்போதைய அமைச்சரவை, இந்த விலைமனுவை குறித்த நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்திருந்தது.
மேலும், 7,000 தொன் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் தாய்லாந்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 2022 ஜூலை 9க்குப் பிறகு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும், அவரது நெருங்கிய ஒருவர் மேற்குறிப்பிட்ட இலங்கையின் கேஸ் நிறுவனத்திற்கு தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
திடீரென இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்
அதன் பின்னர், தாய்லாந்து கேஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலைமனு ஒப்பந்தம் திடீரென இரத்து செய்யப்பட்டு, ஒரு தொன் அமெரிக்க டொலர் 129 என்ற அதிக விலை முன்மொழிவை வழங்கிய ஓமான் நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

அப்போதைய இலங்கை கேஸ் நிறுவனத்தின் தலைவர் , தாய்லாந்தின் கேஸ் நிறுவனத்திற்கு கப்பல்கள் இல்லை என்பதே விலைமனு ரத்துக்கான காரணம் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஆனால் அதற்கு முன், 7,000 தொன் எரிவாயு ஏற்றிய கப்பல்கள் இலங்கை நோக்கி புறப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அமெரிக்க டொலர் 96 மற்றும் 129 இடையிலான விலை வேறுபாடு டொலர் 33 ஆகும். இந்த குறைந்த விலைமனுவை ரத்து செய்து, அதிக விலை விலைமனுவை வழங்கியதன் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1,138 மில்லியன் என கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணம் யாருடைய கைகளுக்குச் சென்றது என்பது தெரியாவிட்டாலும், அக்காலத்தில் மத்திய வங்கி மற்றும் திறைசேரிக்கு பொறுப்பான நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க இதற்குப் பொறுப்பாளி என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, கணக்காய்வு அறிக்கைகள் வெளியாகும் முன்னரே, ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் நாகானந்த கொடிதுவக்கு 2022 ஒக்டோபர் 22 அன்று, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டை அளித்திருந்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என தெரியவில்லை.

என் ஏன்றால் ரணிலின் ஆட்சிக்காலத்தில் அந்த ஆணைக்குழு செயலற்ற நிலையில் இருந்ததாகவும் அடிக்கடி தற்போதை அரசாங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன்படி தற்போதைய ஆணைக்குழு இயக்குநர் நாயகம் ரங்க திசாநாயக்க இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அந்த முறைப்பாட்டை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது அவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்