ஆலய விவசாய காணி அபகரிப்பு நடவடிக்கையை முறியடித்த விவசாயிகள்
நீர்முக பிள்ளையார் ஆலய விவசாய காணி அபகரிப்பு நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பேரம் பகுதியில் அமைந்திருக்கும் நீர்முக பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் காணிகளை எல்லையிட முற்பட்ட வேளை அப்பகுதி விவசாயிகளால் மீளவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்துக்கு சொந்தமான சுமார் 16 ஏக்கர் காணிகளேயே தொல்பொருள் திணைக்களத்தினர் கையகப்படுத்த முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், பெரும்பான்மை இனத்தவர்கள் இங்குவந்து காணிகளை அபகரிப்பதற்கு நாங்கள் எந்த வகையிலும் இடமளிக்க முடியாது.
நாங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றோம். இதுவரை காலமும் இந்த காணியை பாதுகாக்க பல வழியிலும் போராடினோம். நாங்கள் இனியும் எவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு தயாரில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் (Yogeshwaran), ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



