இனவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை!
இனவாதத்திற்கு கிடைத்த பரிசுதான் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கிடைத்த வீழ்ச்சிக்கு காரணம் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் ( R. Rajaram) தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை குறித்து கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்திற்கு காட்டும் அக்கறையை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு காட்டுவதில்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இதனைப் பார்க்கும் பொழுது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாதென்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
அனுபவமில்லாத அரசியல்வாதிகள் ஆட்சி நடத்துவதாலே நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் பொருளாதாரம் மறுமலர்ச்சி பெற வேண்டுமானால் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை. இதனை அனைத்து மக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்” என்றார்.