நான்காவது அலையென பொய்யானபிரசாரத்தை மேற்கொள்ளும் மருத்துவர்கள் -அரசாங்கம் கடும் விமர்சனம்
இலங்கையில் நான்காவது கொரோனா அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பை ஆளும் பொதுஜன பெரமுன முற்றாக நிராகரித்துள்ளது.
முன்னணி சுகாதார நிபுணர்கள் வெளியிட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பில் எந்தவித உண்மையும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“04ஆவது அலையின் மிக அருகில் நாங்கள் வந்துவிட்டோம் என்று சில மருத்துவர்கள் பொய்யான பிரசாரத்தை செய்துள்ளனர். அரசாங்கம் மீது அந்த விடயத்தில் விரல் நீட்டமுடியாது. முதலாவது கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக தடுத்தோம். இரண்டாவது சுற்றில் எமது நாடே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில் ஆசிய வலயத்தில் தடுப்பூசிகளை அளித்துவரும் நாடுகளின் பட்டியலில் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.
இந்த தொற்றின் பல திரிபுகள் வருகின்றன. நாடு என்கிற வகையில் நாம் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்வதல்ல. அரசாங்கம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பெற்று ஒன்லைன் கற்றலை செய்ய முடியாது என்று போராட்டம் செய்கின்றனர்.
தடுப்பூசி பெற்ற பின், ஒன்லைன் ஊடாக கற்பித்தலுக்கு அல்ல, போராட்டம் செய்யவே செல்கின்றனர். உலகில் முதல்நாடாக இந்த விடயத்தில் நாங்கள் இருக்கின்றோம். தாதிகள் பணிபகிஷ்கரிப்பு செய்கையில் மருத்துவர்கள் வேறு விடயத்தை தெரிவிக்கின்றனர். தாதியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்றபோது மருத்துவர்கள் போராடுகின்றனர். சுகாதார பரிசோதகர்கள் கஸ்டப்படுகின்ற நிலையில் தினமும் மாலை அதன் தலைவர் சென்று ஊடகங்களுக்கு முன்பாக அரசாங்கத்தை விமர்சிக்கின்றார்.
அவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். எந்த வழியிலும் பணிகளை செய்யாத குமுதேஷ் என்பவர், தினமும் ஊடகங்களுக்கு முன் விமர்சனம் செய்கின்றார். அத்துடன் ஆண் தாதியொருவரும் அவ்வாறு செய்கின்றார். நாடாளுமன்றத்தில் ஒருநாள் தான் ஆசனத்தில் இருந்தார். ஆனால் அவரும் சொகுசு வாகன இறக்குமதிக்கான பத்திரத்தைப் பெற்றுக்கொண்டார். இவர்கள்தான் கோவிட் தடுப்பு பற்றி கருத்து வெளியிடுகின்றனர்.
” நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி விடயத்தில் தமிழ் மலையக அரசியல்வாதிகள் போலி நாடகமாடுவதாகவும் டிலான் பெரேரா விமர்சித்தார்.
வேலுகுமார், மனோ கணேசன், திகாம்பரம் உள்ளிட்டவர்கள் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயது சிறுமி உயிரிழந்த விடயம் பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறையிட்டதை பத்திரிகைகளில் கண்டேன். நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்த அந்த மூவரும் ரிஷாட்டிற்காக முஜிபுர் ரஹ்மான் பேசியபோது கைதட்டி பேசினார்கள்.
இவர்கள் மூவரும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு வந்த போதிலும் மலையக சிறுமி ரிஷாட்டின் இல்லத்தில் மரணித்துள்ள போதும் ரிஷாட்டிற்காக முஜிபுர் ரஹ்மான் பேசியபோது அதனை கைதட்டி வேடிக்கை பார்த்தனர். தமிழ் ஊடகங்களுக்கு புகைப்படங்களை பிரசுரித்துக் கொள்வதற்காக அவர்கள் செயற்பட்டனர்.
இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுபவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்படி மலையக மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.