சிறிலங்கா அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டும்- வலிவடக்கு மக்கள் போராட்டம்!
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வலிவடக்கு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வ.பிரபாகரன் தலைமையில் இந்த போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பிலும், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிவடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, வீட்டுத் திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தம்மால் இயலாத விடத்து பொறுப்பானவர்களிடம் உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டனர்.
குறித்த கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை வடமாகாண ஆளுநர் ஊடாக பிரதமருக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கும் வழங்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


