யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நாகை மற்றும் யாழ். (Jaffna) காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடத்தை சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படுமென்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வருகை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது.
இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். நாளுக்குநாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் சீற்றம் மற்றும் காற்று
வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படும். இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது.
ஆகவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது. நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
