நிதியமைச்சு அதிகாரி மரணம் : உளவியல் மரணப் பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என 'தினன தகுன' அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரிக்கை விடுத்துள்ளார்.
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடம் உளவியல் ரீதியான மரணப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஷிரால் லக்திலக இதன்போது தெரிவித்துள்ளார்.
தாஜுதீனின் மரணம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிதியமைச்சு அதிகாரியின் மரணம் தவறான முடிவெடுத்த உயிர்மாய்ப்பு என சட்ட வைத்திய அதிகாரிகள் குழு நேற்று (01) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதை நாம் அறிவோம்.
தாஜுதீனின் மரணம் தொடர்பிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வந்தன, ஆனால் அவை சரியானவை அல்ல என்பது பின்னரே தெரியவந்தது.
எனவே, இந்த மரணப் பரிசோதனை அறிக்கை நல்லது, ஆனால் மருத்துவ அறிவியலில் இதற்கு அடுத்த கட்டமாக உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை ஒன்று உள்ளது. அதனை முன்னெடுக்குமாறே நாம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோருகிறோம்.
மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள்
உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததற்கான காரணம் என்ன, அவரது மனநிலை எவ்வாறு இருந்தது, அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது, மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும்.

ஹர்ஷ டி சில்வா கூறுவது போல் இது ஒரு திருட்டு. நிதிச் செயலாளர் 4 மாதங்களாக இதனை மறைத்ததில் எமக்கு சந்தேகம் உள்ளது.
உயிரிழந்த அதிகாரியின் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செயற்பாடு இதன் பின்னணியில் இருந்திருக்கலாம். இது எனது தவறு அல்ல என்ற அடிப்படையிலேயே இந்த உயிர்மாய்ப்பு நடந்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.
ஒன்பது தடவைகள் இது தவறுதலாக நடக்கவில்லை என்றால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்கு அந்தச் சூழலை உருவாக்கியது யார்? என்பது தொடர்பில் வௌிப்பட வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |