2025ற்கான நிதிப் பயன்பாடு : தேசிய ரீதியில் சாதனை படைத்த வடக்கு மாகாணம்
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தலைமையில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் மிகச் சிறப்பான நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டு எமது மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாயும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காக அண்ணளவாக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவும் ஜனவரி மாதத்திலிருந்தே எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகச் செயற்படுத்த முடியாத மேலதிகத் திட்டங்களுக்குரிய நிதியை, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடம் கோருவதற்கு எமக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்களின் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். எனவே, இவ்வாண்டில் எம்மால் முன்னரை விடக் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
எமது மாகாணத்தில் சில குறிப்பிட்ட பிரதேசங்கள் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அனைவரினதும் கூட்டு முயற்சி
எனவே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்பை முற்றாக இல்லாதொழிப்பது அல்லது குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பில் இவ்வாண்டில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சொல்வது சுலபம்; ஆனால், அதனைச் நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் இங்கிருந்து கொள்கைகளை வகுத்தாலும், அதனைத் களத்தில் செயற்படுத்துபவர்கள் நீங்களே. அந்தச் செயற்பாடுகளின்போது நீங்கள் பெற்ற அனுபவங்களே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.
பிரதம செயலாளர் முதல் கள உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே இம்முறை எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளது.
இருப்பினும், நாம் வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 6 மணி நேரம் முன்