டக்ளஸின் கையாலாகாத் தனமே இதற்கு காரணம்!
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் போயுள்ளமையானது அவரது கையாலாகத் தனமே என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட பகுதி மீனவர்கள் முப்பது வருட யுத்தத்தில் தமது தொழிலை முற்றுமுழுதாக இழந்தவர்கள். யுத்தத்திற்கு பின்னர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தங்களுடைய தொழிலை விருத்தி செய்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவர்கள் பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய மீனவர்கள் அவர்களுடைய இழுவை மடிகளுடன் வந்து தொழில் செய்வதால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதோடு அவர்ளுடைய வலைகள் மற்றும் உபகரணங்களும் அழிக்கப்படுகின்றன. இதற்கு பல வகையான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு முன் மொழிவுகளை முன்வைத்த போதிலும் இதுவரை அவர்களால் சாதகமான ஒரு முடிவை எடுக்க முடியாதுள்ளது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக வடமராட்சி,வல்வெட்டித்துறை பகுதிகளில் இந்திய மீனவர்கள் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்குள் வந்து தொழிலை மேற்கொள்வதனால் வடமராட்சி மீனவர்களுடைய கோடிக்கணக்கான வலைகள் அறுக்கப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை கடற்றொழில் அமைச்சரோ, திணைக்களமோ இவர்களை தேடிச் சென்று தீர்வினை வழங்குவதற்கான முயற்சிகள் வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் வடமராட்சி முனைப் பகுதியில் இருக்கின்ற மீனவர் ஒருவர் இந்திய படகுகளால் அறுக்கப்பட்டு அழிக்கப்பபட்டு மீதமாக இருக்கின்ற வலைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கின்றார்.
இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அவர் எந்தளவு மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பது விளங்குகிறது. எனவே அரசாங்கத்திற்கு அழுத்தமாக சொல்லுகின்றோம் இந்த பிரச்சினைக்கு சாதகாமான ஒரு தீர்வை நிரந்தரமாக வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.