விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை! கடற்றொழில் அமைச்சர் மீது குற்றச்சாட்டு
புதிதாக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்கு கலாச்சார அமைச்சர் விருப்பம் தெரிவித்தாலும் அதே அரசாங்கத்தில் உள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பெளத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பர மேகன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சங்கிலி மன்னின் 407 ஆவது சிராத்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலாச்சார அமைச்சர் விருப்பம்
“இலண்டனில் இருக்கும் அன்பர் ஒருவர் யாழ்ப்பாண விமான நிலையத்தில் வைப்பதற்காக நடராஜ சிலையை அனுப்பியிருந்தார். அதனை வைப்பதற்கான முயற்சிகளை நானும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் விகாராதியுடன் இணைந்து மேற்கொண்டோம்.

கலாச்சார அமைச்சர் விருப்பம் தெரிவித்த நிலையில் மத முரண்பாடு வந்துவிடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிலையை வைக்க விடாமல் தடுக்கிறார்.
இந்த நிலை தொடர்வதால் விமான நிலையத்தில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நடராஜர் ஒழித்து நாக விகாரைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆகவே இந்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |