வெள்ள அனர்த்த நிவாரண நிதி விவகாரம் போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்
வெள்ள அனர்த்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணநிதி உதவியை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்து மூதூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பொதுமக்களினால் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (13) மாலை அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உதவியைப் பெற்று, 50 ஆயிரம் ரூபாய் இரண்டாம் கட்டம் பெறுவதற்கு தகுதி இருந்தும் தமது பெயர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தும் இதற்கான தீர்வினை பெற்று தருமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மூதூர் பிரதேச செயலாளர்
பின்னர் மூதூர் பிரதேச செயலாளரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் சந்தித்து பேசியதோடு இதற்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க விசேட குழுவொன்றை அமைப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் பின்னர் மூதூர் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 50,000 கொடுப்பணவு பெறாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் என்னை சந்தித்து அவர்களது மனக் குறைகள் தொடர்பாக என்னிடம் முறையிட்டார்கள் .
இது தொடர்பாக நான் சுயாதீன குழு ஒன்றை அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




