கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா(karuna) மற்றும் பிள்ளையான் (pillayan)இருவரும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை என இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத் தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். போரை முடிப்பதற்கு கருணா, பிள்ளையான் இருவரும் வழங்கிய தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் இருந்த கருணா குழுவிற்கு பாதுகாப்பு
கருணாவிடம் 150 பேர் இருந்தனர். அவர்களில் 80 பேர் சிறுவர் போராளிகள். ஏனைய சிலர் கொழும்பில் இருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினோம். புலிகள் அமைப்பில் இருந்து, வடக்கில் படையினருக்கு எதிராக சண்டை இட்டிருந்தாலும், பிரபாகரன் எங்கிருந்தார் என்ற தகவலைக்கூட கருணா எமக்கு வழங்கவில்லை.
அதேபோல நான் போர் செய்த வியூகத்தக்கு அமைய எனக்கு உளவு தகவல்கள் தேவைப்படவும் இல்லை. ஏனெனில் நாம் தலையை தூக்கும்போது எமக்கு அருகில் பயங்கரவாதிகள் இருந்தனர். எனவே, உளவு தகவல்கள் அப்போது தேவைப்பட்டிருக்கவில்லை. எதிரிகள் எங்கு இருக்கின்றார்கள் என கருணாவிடம் கேட்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை.
புலிகள் தமிழர்களின் இராணுவம்
வாழைச்சேனைக்கு மேல் கஜு வத்தை என்ற ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் மாத்திரமே கருணாவின் படை பயன்படுத்தப்பட்டது. அதுவும் பிரதேசம் தொடர்பில் அனுபவம் இருக்கும் என்பதால் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதுவும் தாக்குதலை முழுமைப்படுத்தாமல் காட்டுக்குள் தப்பி வந்துவிட்டனர்.
எப்போதும் கருணா, பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை. புலிகள் அமைப்பை தமிழர்களின் இராணுவம் என்றே தமிழர்கள் சிலர் கருதினர். புலிகள் தாக்குதல் நடத்தும்போது டயஸ்போராக்கள் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புலிகள் அமைப்புடன் மோதினாலும், புலிகள் தமிழர்களின் இராணுவம் என்ற உணர்வு கருணா, பிள்ளையானிடமும் இருந்தது.
இராணுவ முகாம்களுக்குள் கருணாவின் ஆட்களை நாம் வைத்திருக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பிள்ளையான் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டதாக முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
