இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு : சுட்டிக்காட்டிய உலக உணவுத் திட்டம்
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை
இந்த நிலையில், கடந்த ஆண்டில் 24% குடும்பங்கள் மட்டளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17% ஆக காணப்பட்டதுடன் ஒகஸ்ட் தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24% வரை அதிகரித்துள்ளது.
பெண் தலைமைத்துவம்
ஆண் தலைமைத்துவ குடும்பங்களில் 23 வீதமாகவும் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 32 வீதமாகவும் உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26% குடும்பங்களில் போதுமானளவு உணவு எடுத்துக்கொள்ளப்படுவதில்லையெனவும் உலக உணவுத் திட்டம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், குடும்பமொன்று அதன் மொத்த செலவில் 62 வீதத்திற்கும் மேல் உணவுக்காக செலவிடுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |