ஈழத்து சினிமாவின் முன்னோடிக்கு பன்னாட்டு மட்டத்தில் நினைவு வணக்கம்
மூத்த கலைப் பேராளுமை ந.கேசவராஜிற்கு பன்னாட்டு மட்டத்திலான நினைவு வணக்கம் கடந்த (23) சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது நினைவுரை நிகழ்த்திய அவரது பாரியார், அவரின் நினைவாக 'கேசவராஜன் அறக்கட்டளை' என்ற பெயரில் நலன்புரி நிதியம் ஒன்று அமைக்கப்படும் எனவும், நலிவுற்றிருக்கும் தாயக கலைஞர்களின் வாழ்வியல் வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை துணை நிற்கும் எனவும் கூறினார்.
அண்மையில் காலமாகிய ஈழத்து சினிமாவின் முன்னோடியான மூத்த கலைப் பேராளுமை கேசவராஜ் நவரட்ணத்திற்கான இணையவழி நினைவு வணக்க நிகழ்வு அவரது நண்பர்களாலும் ஆதரவாளர்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைவில் இந்த நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டிருந்தது.
அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய அமரர் சேகவராஜின் நினைவு வணக்க நிகழ்வில் கேசவராஜ் பற்றி கவிஞர் சோதியா ஆக்கிய விருத்தத்தை திருமதி தாரணி மகாலிங்கள் நோர்வேயில் இருந்து பாடி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நண்பர்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பேராளுமை கேசவராஜ் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
பின் அமரர் கேசவராஜிற்கு நினைவு வணக்கம் செலுத்தும் வகையில் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. தாயத்திலிருந்து திருமதி கமலராணி கேசவராஜ், திரு சத்தியன் கோபாலகிருஸ்ணன் (முரளி), திரு ஞானதாஸ் காசிநாதர், திரு யசிதரன் அந்தோனிப்பிள்ளை, திரு கோபிஷாந் ரவீந்திரன், திருமதி பிரியதர்சினி ஸ்டீபன், திருமதி ஷாலினி சார்ல்ஸ், திரு விமல்ராஜா சிவலிங்கம், திரு டானியல் சௌந்திரன் திரு மாணிக்கம் ஏரம்பு, திரு மகேந்திரசிங்கம் திரு ஜனந்தன் கேசவராஜ் ஆகியோருடன், பிரபல திரைப்பட இயக்குனர் பிரிசன்ன விதானகே, கனடாவிலிருந்து திரு சிறிஸ்கந்தன் பரமநாதன், திரு இலங்கேஸ்வரன், திரு நேரு குணா, பிரான்ஸிலிருந்து திருமதி உத்தமராணி புஸ்பராஜா, திரு குணா ஆறுமுகராஜா, திரு மயூரதன் தேவராசப்பிள்ளை (அஜந்தன்), திரு பரா குமாரசாமி, திரு கமிலஸ், பிரித்தானியாவிலிருந்து திரு புலவர் கீத பொன்கலன், திருமதி தர்சினி மயூரன், டென்மார்க்கிலிருந்து திருமதி சசிதேவி ரிச ஆகியோர் அமரர் கேசவராஜ் குறித்த தமது நினைவு வணக்க உரைகளை வழங்கியிருந்தனர்.
நோர்வேயிலிருந்து திரு. வசீகரன் சிவலிங்கம் கவிதை வடிவில் தமது நினைவ வணக்கத்தை வழங்கியிருந்தார். இவருக்கான இணையவழி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்திய பலரும், இவருடனான தமது கலைத்துறை பணிகளையும், நினைவுகளையும் எடுத்துரைத்தனர். இவருடைய வெற்றிக்கு பின்னால் இருந்த இவரது குடும்பத்தினரின் பங்களிப்பையும் எடுத்துரைத்தனர்.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலில், குறிப்பாக திரைப்படத்துறையில், தன்னார்வமாக இணைந்து கொண்ட அமரர் கேசவராஜன், 1986ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட 'தாயகமே தாகம்' என்ற முழுநீள திரைக்காவியத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இவரால் நெறிப்படுத்தி, தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம், திசைகள், கடலோரக்காற்று போன்ற திரைக்காவியங்கள் பெருவெற்றியைப் பெற்றிருந்தன.
2009இன் பின்னர் இவரால் தயாரிக்கப்பட்ட 'பனைமரக்காடு' என்ற திரைப்படம் மூலம், போருக்கு பிந்திய தமிழர் தாயகத்தின் காட்சிகளை மீண்டும் திரைமொழியில் காவியமாக தொகுத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக 2019ஆம் ஆண்டு நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் வருகை தந்திருந்தார்.
இவ்வாறு பல திரைக்காவியங்களை உருவாக்கிய அவர், கடந்த ஜனவரி 09ஆம் திகதி அன்று சுகவீனம் காரணமாக தாயகத்தில் காலமாகியிருந்தார்.


