சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அழிவடையும் காடுகள்
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
விறகுகளை பெறுவதற்காக மக்கள் அருகிலுள்ள காடுகளுக்குள் நுழைவதால், காடுகள் அழிவடையும் நிலை இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு வெடிப்பு போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் விறகு பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொழும்பிலும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பிரதான ஐந்து நட்சத்திர ஹொட்டல் உள்ளிட்ட மேலும் சில ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அதனால் ஏற்படும் நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு தட்டுப்பாடு நிலை நீடிக்கும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.