முன்னாள் CCD பணிப்பாளர் விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி (Ratnapura) நீதவான் சமன் டி. கே. பரனலியனகே இன்றையதினம் (13.12.2024) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
14 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஒருதலைப்பட்சமாக சொத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அத்தியட்சர்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரான உதவி காவல்துறை அத்தியட்சகரை கைது செய்து இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, உரிய விசாரணையின்றி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ திறந்த நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குருவிட்ட இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வந்து தனது சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான சொத்து பலாத்காரமாக அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
