சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்
சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.
ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில் நேற்று (12) 11 மணியளவில் பெய்ஜிங்கில் உயிரிழந்தார்.
ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி, ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார்

மேலும், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார்.
இதன் மூலம் சீனா சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், 2002ஆம் ஆண்டு ஜூ ரோங்ஜி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |