அநுரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தயாராகும் ரணில், மைத்திரி
முன்னாள் ஜனாதிபதிகளான - ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த யோசனையை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்
முன்னதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யோசனையின் கீழ், அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பு, செயலக கொடுப்பனவுக்கான கட்டணம் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகின்றன.
குறித்த யோசனை அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும், 97,500 ரூபாய் என்ற மாதாந்த ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்.
இந்தநிலையில் குறித்த யோசனையை சட்ட சவாலுக்கு உட்படுத்துவதற்கு முன்னர், இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள், பூட்டான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பிற பிராந்திய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் தொடர்பில் ரணில் மற்றும் மைத்ரி ஆகிய முன்னாள் ஜனாதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு பகுப்பாய்வு செய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
