நாடாளுமன்றம் அருகே திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது!
சிறிலங்கா நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் அருகே, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த 2,812,350 ரூபா பெறுமதியான இரும்புக் குழாய்கள் மற்றும் இரும்பு கிளிப்புகள் என்பன அண்மையில் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பொருட்களைத் திருடியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
நால்வர் கைது

இதற்கு மேலதிகமாக கணக்காய்வாளர் திணைக்களத்தின் மின்சார சுற்றுகளில் பொருத்தப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வயர்களை திருடிய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இரண்டு மெக்கானிக்களும், கொத்தனார் வேலை செய்யும் ஒருவரும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 50, 35, 19 மற்றும் 20 வயதுடைய எதுல்கோட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்