புலிகள் முகாம் பகுதியில் புதையல் முயற்சி: நால்வர் அதிரடி கைது
முல்லைத்தீவில் (Mullaitivu) புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோண்டும் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணைகளை நடத்தி குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளர்கள்.
குறித்த பகுதி போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக காணப்படுவதால் விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த பகுதியில் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக நம்பி தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில், யாழ்ப்பாணம் மீசாலை,கிளிநொச்சி உருத்திரபுரம், பெரியபரந்தன் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த நால்வரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
