கொவிட் நான்காவது அலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்து பயனில்லை. நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே பிரதானமானதென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொவிட்19 நான்காவது அலைக்கு எதிர்க்கட்சிகள் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்று நாட்டுமக்களுக்கு ஆற்றிய மிகச் சிறந்த உரையாக ஜனாதிபதி ஆற்றிய உரை அமைந்ததாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் ,
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொவிட்19 தொற்றுநோயை எதிர்கொண்டு நாடு ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இந்த முக்கியமான தருணத்தில் அனைத்து மக்களும் நிலைமையை புரிந்து கொண்டு கட்சி, இனம், மத பேதமின்றி, நாடு முகம் கொடுத்துள்ள மோசமான நிலையை உணர்ந்து உரிய திட்டங்கள் மற்றும் முறைகளைப் பின்பற்றி இந்த தொற்றுநோயிலிருந்து விடுபடஅனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் முதன்மையான தீர்வு என்று உலக சுகாதார அமைப்பும் நிபுணத்துவ மருத்துவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவ்வாறின்றி , நாட்டை மூடுவது கொரோனாவுக்கு ஒரே தீர்வு அல்ல. ஜனாதிபதியின் முயற்சியின் விளைவாக, ஒவ்வொரு மாதமும் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெறுகிறோம்.
அவை துரிதமாக மக்களுக்கு ஏற்றப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.