பிரான்சில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் - பரப்புரைக் கூட்டத்தில் கைகலப்பு
பிரான்சில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் களத்தில் உற்றுநோக்கலை ஏற்படுத்திவரும் வலதுசாரி வேட்பாளர் எரிக்செமோரின் நேற்றைய முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுமென பிரான்ஸ் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாரிஸ் நகரின் வில்பந்த் நகரில் நேற்று இடம்பெற்ற எரிக் செமோரின் முதலாவது பரப்புரைக் பொதுக்கூட்டத்தில் இனவெறிக்கு எதிரான ஆர்வலர்களுக்கும் செமோரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் இந்த வன்முறைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுமென பரிஸ் வழக்குரைஞர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்களில் ஒரு கட்டமாக எரிக்செமோரின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும் பதிலுக்கு இனவெறிக்கு எதிரான ஆர்வலர்கள் மீது செமோரின் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எரிக் செமோர் உரையாற்ற ஆரம்பித்ததும் அங்கு கூடியிருந்த இனவெறிக்கு எதிரான ஆர்வலர்கள் இனவெறி வேண்டாம் என்ற கொட்டொலிகளுடன் அதே வாக்கியங்களை உள்ளடக்கிய மேலங்கிகளை காட்சிப்படுத்தியதையடுத்து அவர்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் மீது நாற்காலிகள் வீசியெறிப்படடிருந்தன.
எனினும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை அமைதிக்குத் திரும்பியபின்னர் கூட்டம் இடம்பெற்றிருந்தது.