மத்திய தரைக்கடலில் அதிரடி வேட்டை! ரஷ்ய எண்ணெய் கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ்
சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதுடன், அதன் இந்திய மாலுமி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ், மார்சேய் (Marseille) நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் தி கிரின்ச் (The Grinch) எனும் எண்ணெய் கப்பலின் மாலுமியான 58 வயதுடைய இந்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உலக கப்பல்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த இக்கப்பல் பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்த போதிலும், இது ரஷ்யாவிற்குச் சொந்தமான கப்பல் என்றும், சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய நிழல் உலக கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு நிதி திரட்ட உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவல்
இந்த நிலையில், கைதான இந்திய மாலுமி தற்போது மார்சேய் நகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கப்பலில் இருந்த மற்றைய மாலுமிகளும் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலைச் சுற்றி வான்வழி மற்றும் கடல்வழித் தடைகள் விதிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கப்பல் பயன்படுத்திய கொடியின் உண்மைத்தன்மை மற்றும் சர்வதேசத் தடைகளை மீறியமை குறித்து மார்சேய் சட்டத்தரணிகள் அலுவலகம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |