அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா சுதந்திரக் கட்சி? இன்று வெளிவந்துள்ள தகவல்
தாம் உருவாக்கிய அரசாங்கம் என்பதோடு அரசதலைவரையும் தாமே தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இந்த அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜங்க அமைச்சருமாக தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் பல்வேறு விடயங்களை கூறினாலும் ஒரு கட்சியாக நாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவில்லை.
அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுடனும் எங்களால் உடன்பட முடியாமல் போனாலும் பங்காளிக் கட்சி என்ற வகையில் சிறிலங்கா அரச தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்தவொரு சவால்களையும் எதிர்கொண்டு, நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவினை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.