அடுத்த மாத தொடக்கம் வரையே எரிபொருள்! பின் நெருக்கடி தொடரலாம் - மத்திய வங்கி ஆளுநர் தகவல்
எரிபொருள் நெருக்கடி தொடரலாம்
ஏதேவொரு வகையில் இந்தியா, சீனா அல்லது வேறு எந்த நாடும் சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி எரிபொருளை வழங்க முடியும். இல்லையெனில் எரிபொருள் நெருக்கடி தொடரலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இது தொடர்பிலான தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''கட்டணம் செலுத்தப்பட்ட எரிபொருள் கப்பல்களில் இருந்து, அடுத்த மாத தொடக்கம் வரை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனினும், எதிர்வரும் காலத்திற்கான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.
மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலர்களாகும். அவற்றில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்கான செலவு 350 - 400 மில்லியன் டொலர்களாகும்.
நிதியை பெறுவது கடினமானது

இதற்கு தேவையான நிதியை இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியேற்படுகிறது, எனினும், தற்போது அவ்வாறான நிதியை பெறுவது கடினமானது.
எவ்வாறாயினும், அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்களுக்கு குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி கிடைத்தால் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஸ்திர நிலையை எட்டினால் மட்டுமே மற்றைய வெளிநாடுகளும் நிதியுதவி அளிக்கும்.
எவ்வாறாயினும், அவ்வாறான நிபந்தனைகள் இன்றி இந்தியா மட்டுமே நிதியுதவி வழங்குவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.