சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..! (படங்கள்)
சங்கானை பிரதேச செயலகம் முன்பாக டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி விவசாயிகள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 12 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது விவசாயத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை சீரான முறையில் விநியோகிக்குமாறும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான பசளையினை சீராக விநியோகிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கானை பிரதேச செயலரிடம் கையளித்துள்ளனர்.
பிரதேச செயலர் கருத்து
விவசாயிகளின் மனுவை பெற்றுக்கொண்ட சங்கானை பிரதேச செயலர் திருமதி. பொ. பிரேமினி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"விவசாயிகளது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசாங்க அதிபருக்கு அனுப்பவுள்ளேன். விவசாயிகளை பொறுத்தவரையில் ஒன்றரை மாதங்களாக மண்ணெண்ணெய் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு வழிமுறையும் காணப்படவில்லை.
மேலும் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூலம் சீரான எரிபொருள் விநியோக முறையினை பிரதேச செயலகத்தினால் செய்ய முடியாததன் காரணமாக அதனை பெற்றுக் கொடுப்பது சிரமமானது என நினைக்கிறேன்.இதனை நான் அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
விவசாயிகளை பொறுத்தவரையில் எரிபொருள் என்பது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. எனவே அரசாங்க அதிபரிடம் இதுதொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வினை வழங்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.










