இலங்கைக்கு வரவுள்ள ரஷ்யா எரிபொருள் கப்பல்! உறுதி செய்யப்பட்ட ஏற்பாடு
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் இரண்டு எரிபொருள் இறக்குமிடங்களில் ஏற்படும் நெரிசலே, எரிபொருள் சரக்குகள் வந்து சேர்வதில் தாமதமாவதற்கு முக்கியக் காரணம் என சி.பி.சி நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த பெரும்பாலான கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப ஏற்பாடுகள்
இருப்பினும், அவற்றின் வருகை தொடர்பான தளவாட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் இன்னும் இறுதி செய்யப்படுகின்றன. இந்த சவால்கள் இருந்தபோதிலும், எரிபொருள் கொள்முதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் நெத்திகுமாரகே,
“சுமார் 32,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 5,000 மெட்ரிக் டன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரண்டு டீசல் சரக்குகள் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து சரக்கு அனுப்பீடுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. முந்தைய மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட விநியோகங்களும் வெற்றிகரமாகப் பெறப்பட்டுவிட்டது.
அதன்படி, பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து மே மாத இறுதி வரை எரிபொருள் விநியோகம் போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் உலகளாவிய விலைகள் காரணமாக, பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்