இலங்கையின் எரிபொருள்களின் சந்தையின் எதிர்கால மாற்றம்!
சமீபத்திய பெட்ரோலிய விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு காரணமாக திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடந்த சனிக்கிழமை முதல் அதன் விலையை உயர்த்தியிருந்தது.
கடந்த எட்டு மாதங்களில் இது இரண்டாவது எல்.பி.ஜி விலை உயர்வாக இது கருதப்படுகிறது.
பரவலாகப் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை, அரசுக்குச் சொந்தமான எல்பிஜி சில்லறை விற்பனையாளர் மற்றும் அதன் ஒரே தனியார் போட்டியாளர் ஆகிய இருவராலும் 17 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்
குறிப்பாக மத்திய கிழக்கு மோதல் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகள் தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளன.

இது தென்னாசிய நாடுகளின் எரிபொருள் சந்தையில் பாரிய அழுத்தத்தை தற்போது ஏற்படுத்தியள்ளது.
ஈரான் கடுமையான பதிலடி கொடுத்ததால், விலைகள் கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளன. இந்த பின்னணியிலேயே இந்த பதற்றம் மீண்டும் பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தை கயிற்றை அறுத்துக்கொண்டு மோதலின் பக்கம் அமெரிக்காவையும் ஈரானையும் திருப்பியுள்ளது.
இந்த பின்னணியில் இலங்கை எரிபொருள் விலையை சுமார் 25% உயர்த்தியுள்ளது. இது ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகவும், மார்ச் 1 முதல் மூன்றாவது முறையாகவும் பதிவாகியுள்ளது.
டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், 2022 பொருளாதார நெருக்கடியின் போது காணப்பட்ட விலை நிலைகளுக்கு நெருக்கமாக வந்துள்ளன.
போக்குவரத்து கவலைகள்
இந்த விலை உயர்வால் போக்குவரத்து நடத்துனர்களிடையே கவலைகள் எழுந்துள்ளன. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்களுக்கு வாரத்தின் நடுவில் பொது விடுமுறையையும் அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இதனுடன், கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அட்டை முறையையும் அது மீண்டும் செயல்படுத்தி, எரிபொருள் கொள்முதலில் கடுமையான வாராந்திர வரம்புகளை நடைமுறைப்படுத்தியது.
மாதாந்த எரிபொருள் விலை
இவ்வாறன நகர்வுகளின் அடிப்படையில் நேற்று இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்குப் பதிலாக, உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வாராந்தம் விலைகளை மாற்றியமைக்கும் புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இது எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
உலகச் சந்தையில் எரிபொருள்
புதிய நடைமுறையின்படி, உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் பட்சத்தில், அதன் நன்மையை வாராந்த அடிப்படையில் மக்களுக்கு வழங்க அரசு எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, உலக சந்தையில் விலைகள் அதிகரிக்கும் போது, உள்நாட்டிலும் விலைகள் அதற்கேற்ப உயர்த்தப்படும்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எண்ணெய் சந்தையில் நிலவும் தளம்பல் நிலையைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை விடுவிப்பது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வியாழக்கிழமை பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது.
விலை நிர்ணய முறை
எனினும், நலிவடைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் அதேவேளை, எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் விலை நிர்ணய முறையைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயம் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

நாட்டின் நிதி அபாயங்களைக் குறைப்பதற்கும், நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கும் எரிபொருள் விலைகளை உலக சந்தையுடன் ஒப்பிட்டுத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் எனச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பின்னணியிலேயே, அரசு இந்தத் தீர்மானமிக்க நகர்வை மேற்கொண்டுள்ளது.
புதிய முறை நடைமுறைக்கு வரும்போது, மாதக் கணக்கில் காத்திருக்காமல் உலகச் சந்தை மாற்றங்கள் வாராந்தம் இலங்கையின் எரிபொருள் விலைகளில் பிரதிபலிக்கும்.
இந்தியா
இது இந்தியாவையும் விட்டுவைக்காத ஒரு அழுத்தம் தான்.
தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட பாதியையும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்துவரும் இந்தியா, அதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாக இறக்குமதி செய்யப்படுவதாலும், உயர்ந்த விலைகள் மற்றும் விநியோகம் குறித்த கவலைகள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் எதிரொலிப்பதாலும் பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

அதே நேரத்தில், நேபாளம், போன்ற அண்டை நாடுகளும் இந்த விநியோக நெருக்கடியைச் சமாளிக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்விலிருந்து நுகர்வோரையும் எண்ணெய் நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில், இந்திய மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது.
இந்த முடிவால் அரசுக்கு ரூ.1.3 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன்ஒயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ.24-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.30-ம் நட்டத்தைச் சந்தித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன.
ஏற்றுமதி வரி
இந்தச் சுமையைக் குறைப்பதற்காக, அரசு இரு எரிபொருள்கள் மீதான சிறப்பு கூடுதல் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்தது.
அதே நேரத்தில், எதிர்பாராத ஆதாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.5 மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீது லிட்டருக்கு ரூ.29.5 ஏற்றுமதி வரிகளை விதித்தது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும், எல்.பி.ஜி-யில் சுமார் 60 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் பாதிக்கும் மேலையும் இறக்குமதி செய்கிறது. நாட்டில் 74 நாட்கள் வரை கையிருப்பு உள்ள நிலையில், தற்போதைய இருப்பு சுமார் 60 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |