வெளிப்புற பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது - ஜி.எல்.பிரிஸ் தெரிவிப்பு
இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதுவே இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ், எஸ்.ஜெய்சங்கரிடம் எடுத்துரைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
நியுயோர்க்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட எஸ்.ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஒரு பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்களில் நடைமுறை ரீதியானதும் நிறைவானதுமான உறவுகளை மேம்படுத்துவதில் புதுடெல்லிக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும் என்பதனை சுட்டிக்காட்டி, அதனை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.
பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகளில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன்னேற்றங்களை, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, அமைச்சர் பீரிஸ் தெளிவுபடுத்தினார்.
2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுவதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியமானவை என்பதை இரு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் இதன்போது இணக்கம் வெளியிட்டனர்.