புலனாய்வு பிரிவினை கொண்டு எம்மை நசுக்கவேண்டாம் - ஜனநாயக அமைப்பின் தலைவர் வலியுறுத்து
மக்களினுடைய நல்வாழ்விற்கு போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுக்கவேண்டாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகளை அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து அவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடருகின்ற காவல்துறையினரின் அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாரை புலனாய்வு செய்கின்றார்கள்
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடகிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற காவல்துறையினரின் திட்டமிட்ட அத்துமீறல்களை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மிக அண்மையில் மருதங்கேணியில் ஒரு போராட்டத்திற்கு பங்குபற்றிய ஒரு கட்சியின் மகளிர் அணித்தலைவியும் அதேபோல், இன்னுமொரு ஆண் உட்பட இருவர் மருதங்கேணி காவலரை கடமை செய்ய விடாமல் தடுத்தார்கள் எனக் கூறி அவர்களை கைது செய்துள்ளார்கள்.
தேர்தல் கடமைகளுக்கு செல்லுகின்ற அனைத்து காவல்துறையினரும் தங்களுடைய காவல் உடையை அணிந்து தான் செல்லுகின்றார்கள்.
ஆகவே இங்கு எதற்காக சிவிலுடையில் செல்லவேண்டும். இங்கே புலனாய்வாளார்கள் யாரை புலனாய்வு செய்கின்றார்கள்.
அரசுக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை அச்சுறுத்தவே புலனாய்வாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றார்கள்.
மைதானத்தில் என்ன வேலை
அதுபோலவே, ஒவ்வொரு தடவையும் எங்களுடைய மக்களின் போராட்டத்தை எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக கிறீஸ் மனிதன், ஆவா குழு, வாள்வெட்டு கும்பல்கள் என இவற்றுக்கு பின்னால் அரச புலனாய்வாளர்கள் தான் செயற்படுகின்றார்கள் என்று வடக்கிழக்கு வாழ் தமிழர்களும் சந்தேகிக்கின்றனர்.
எமது மக்கள் உரிமைகளுக்காக போராடுகின்ற அரசியல் கட்சிகளாக, அமைப்புக்களாக இருந்தாலும் அவர்கள் வேண்டுமென்றே காவல்துறையினரின் கடமைகளை தடை செய்தார்கள் என்று வர்ணனை செய்கின்றது அரசு ஆனால் பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினர் பரீட்சை மண்டபத்தில் தானே இருக்க வேண்டும்.
எவ்வாறு அவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர முடியும்.
இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள்
“ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்காக இந்தப் புலனாய்வாளர்கள் ஏவி விடப்படுகின்றார்கள்.
எங்களுடைய மக்களையும் அதிகமான பணத்தினை வழங்கி புலனாய்வாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
தமிழ் தேசியப் பரப்பில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்சார் தீர்வுகளுக்கான அமைப்புகள் மீதும் புலனாய்வு செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.
ஏனென்றால் அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்காக எத்தனையோ கோடி ரூபாய் கொடுத்து சிலரை நீங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளீர்கள் .
ஆகவே அரசியல் கட்சிகளை அச்சுறுத்தாதீர்கள், மக்கள்சார் சிவில் அமைப்புகளை அச்சுறுத்தாதீர்கள், தமிழ் மக்களினுடைய இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள்.
மக்களினுடைய நல்வாழ்வு சார்ந்த எந்த ஒரு அமைப்பினையும் அச்சுறுத்த வேண்டாம்” என்றார்.
