இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு : சபையில் கடும் வாக்குவாதம்... அமைச்சரின் அறிவிப்பு
எரிவாயு விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே வர்த்தக அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், லிட்ரோ எரிவாயு 82 வீதம் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் அதேவேளையில், லாஃப் எரிவாயு நிறுவனம் சுமார் 18 வீதத்தை பூர்த்தி செய்கிறது.
சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க லிட்ரோ நிறுவனம் நாளொன்றுக்கு விநியோகிக்கும் எரிவாயுவின் அளவை 1,000 - 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,500 மெட்ரிக் தொன் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, லிட்ரோ நுகர்வோரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவு எரிவாயுவை கொள்வனவு செய்ய முற்பட்டமையே இந்த நிலைக்குக் காரணம்.
எதிர்வரும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாது.” என தெரிவித்தார்.
கருத்து தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ஓமான் நிறுவனத்திடம் இருந்த விநியோக டெண்டரை நீக்கிவிட்டு வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியமையே இந்தத் தட்டுப்பாட்டிற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், டெண்டர் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், போதிய கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து அதிகளவில் எரிவாயுவை சேமித்து வைக்கத் தேவையில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |