ராஜபக்சர்களுக்கு சஜித் தரப்பு அறிவுரை
மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து ஒதுக்கப்பட்ட அநாவசிய செலவுகளை நிறுத்தி அவற்றை ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்க பயன்படுத்துமாறு அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவுரை கூறுகின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka), நாட்டின் கல்வித்துறையானது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“உலகின் ஏனைய நாடுகள் கல்வித்துறைக்கான முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்ற போதிலும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நடைபாதைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்தலை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகளில் முதலீடு செய்வதையே மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றது.
எனவே மாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் இன்று வயிற்றை மாத்திரமே சிந்திப்பதாகவும், மூன்று வேளை உணவை விடுத்து, இரண்டு வேளை உணவை உட்கொள்ளும்படி ஆளும் பொதுஜன முன்னணியினர் மக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். இப்படியானவர்களே இன்றைய அரசாங்கத்தில் இருக்கின்றனர்” என கடுமையாகச் சாடியுள்ளார்.