ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் வெளியான வர்த்தமானி - சாணக்கியன் வெளியிட்டுள்ள அறிக்கை
கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை நாங்கள் வெற்றியாக கருதவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் வௌியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை. இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும்வரை என்றும் தொடர்வோம். நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இதற்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தேன். 20 இற்கு ஆதவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதிகாத்தனர்.
எனினும் நானும் இதுகுறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பியிருந்தேன்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போதுகூட நாம் இதுகுறித்து பலமானதொரு செய்தியினை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்தோம் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.