இந்திய முப்படைத்தளபதி சென்ற ஹெலி விபத்தில் சிக்கியது எப்படி? - விசாரணையில் வெளிவந்த தகவல்
தமிழகம் குன்னூர் அருகே 14 பேர் உயிரிழந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பிரச்சனை எதுவும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் இருந்து குன்னூருக்கு கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி சென்ற Mi-17V5 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat)உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
உலகின் மிக அதிநவீன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதும், நாட்டின் பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய அதிகாரி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவடைந்துவிட்டதாகவும் அது சட்டரீதியான தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஹெலிகொப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது,
அதாவது அந்த தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் விமான ஓட்டிஅல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அத்துறை வல்லுனர்கள் CFIT என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ஹெலிகொப்டர் தரையிறங்க 7 நிமிடம் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விசாரணையில் கணிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் இந்த கூட்டு ஆய்வறிக்கை சட்டரீதியாக சரிபார்க்கப்பட்டு பின், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.