தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு
உக்ரைன் - ரஷ்யா போர்நிறுத்தத்திற்காக அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.
இந்தநிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.
உக்ரைன் இராணுவம்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனையை உக்ரைன் ஏற்க மறுத்ததே இந்தத் தொய்வுக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே சமரசம் செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பது நியாயமற்றது எனவும், தமது பிராந்தியத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்ய தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் விளாதிமீர் மெடின்ஸ்கியும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி கட்டமைப்புகள்
மேலும் தெரிவித்த அவர், விவாதங்கள் சவாலானதாக இருந்தபோதிலும் அவை ஆக்கபூர்வமாக அமைந்தன எனவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டிருந்தது.

தற்போதைய கடும் குளிர்காலத்தில் ரஷ்யாவின் தாக்குதலால் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் உக்ரைன் அரசின் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிவடைந்துள்ளமை பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |